இந்த கதை முழுக்கு முழுக்க கற்பனையாக எழுதப்பட்டது மட்டுமே. சிந்திப்பதற்கு மட்டுமே.

முன்னொரு காலத்தில் சீமந்தநாடு என்னும் பகுதியை ஆட்சி செய்து வந்த இந்துசேகரன் என்ற மன்னன் மிகவும் கருணையுடையவன். ஆனால் தம் மக்களுக்கும் ஏதாவது தீங்கு என்றால் எந்த எல்லை வரைக்கும் செல்பவன். அந்த அளவுக்கு மக்கள் பற்று கொண்டவன். எதிரிகளை வலைப்பதிலும், கொடியவர்களை பிடிப்பதிலும் திறமைசாலி. இவரின் அமைச்சரவையில் அனைவரும் சமம் என்பதை எப்போதும் நிலைநிறுத்துபவன். இவருக்கு உறுதுணையாக நண்பனும், ராஜ உபதேசியான ஆலமர்செல்வன் என்பவன் விளங்கினான். இவன் மிகவும் புத்தி கூர்மை உடையவன். எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் சமயோசிதமாகவும் பதட்டப்படாமலும் சிந்திக்கும் திறமை உள்ளவன். இவர்களின் நட்பு மற்றும் கூட்டணி பார்போர்களை வியக்குமளவுக்கு விளங்கியது. எதிரி நாட்டு படைகள் இவர்களின் ஒற்றுமையான செயல் முறைகளை கண்டு திகைத்து நிற்பர். எப்பேர்பட்ட படை பலத்துடன் வந்தாலும், இவர்களின் முன்னால் அவர்கள் குழந்தைகள்தான். அப்பேற்பட்ட திட்டத்துடன்தான் அவர்கள் தங்களின் படைகளை கையாண்டு வெற்றியை ஈட்டுவர்.

அதனால் இவர்களை நேர்நின்று போர்செய்து தோற்கடிப்பது கடினமானது என்று இவர்களின் ஒரு எதிரி நாட்டு மன்னன் ஏகபாதன் வஞ்சம் செய்து சாய்க்க எண்ணி, அதற்கான கட்டத்தை நோக்கி காத்திருந்தான். ஒரு அதற்காக கண்காணிக்க ஒற்றனையும் அனுப்பி வைத்திருந்தான்.

ஒருநாள் மன்னன் இந்துசேகரன் தம் மக்களுக்கு தங்களின் திறனை வெளிக்கொணரும் வகையில், சமத்துவ கோட்டை எனும் அரங்கம் நிறுவி அதன் திறப்பு விழாவை வெகு சிறப்பாக நடத்த ஆசைகொண்டான். அச்சமயம் பார்த்து தன நண்பனும் ராஜ உபதேசியான ஆலமர்செல்வன் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள, தன நாட்டிலிருந்து கிழக்கு நோக்கி வெகு தொலைவிலுள்ள உருதிரலோகம் எனும் தேசத்திலுள்ள பிரசித்தி பெற்ற மாயோன் மலைக்கு சென்றிருந்தார். அவர் செல்லுமுன் ஒரு வாக்கையும் அரசனுக்கு அளித்திருந்தார். அதாவது, சமத்துவ கோட்டை திறப்பு விழாவிற்கு முன் நிச்சயம் தீர்த்த யாத்திரையை முடித்திவிட்டு கலந்து கொள்வேன் என்று. திறப்பு விழா தேதி குறிக்கப்பட்ட நன்னாளன்று நிச்சயம் வருகை தருவேன் என்று கூறி சென்றிருந்தார்.


இதை அறிந்து கொண்ட எதிரி நாட்டு ஒற்றன், இச்செய்தியை மன்னன் ஏக பாதனிடம் கொண்டு சேர்த்து வெகுமதியை பெற்றுகொண்டான். இதுதான் நல்ல சமயம் என்று நினைத்த ஏகபாதன், அவர்களின் நாட்டில் ஏதேனும் ஒரு விபரீதத்தை நிகழ்த்த திட்டமிட்டான். இதனால் சமத்துவ கோட்டை விழா தடை பட்டு அவப்பெயரை பரிசளிக்க திட்டம் தீட்டினான்.

இந்த சிறப்புமிக்க விழாவிற்கு மன்னன் இந்துசேகரன் மற்ற நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்தான், ஏகபாதன் உட்பட. சிறு குறு நில மன்னர்கள் என்று ஒரு ஆயிரம் மன்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிய நிகழ்வில் இந்துசேகரன், அனைத்து மன்னர்களுக்கும் கிடைப்பதற்கரிய பரிசை அனைத்து மன்னர்களுக்கும் அளிக்க ஆவல் கொண்டான். அதனால் சீமந்த நாட்டிற்கே பெயர் பெற்றுகொடுத்த கிடைப்பதற்கு அரிதான, மலாஞ்சி வகை பழத்தில் எடுக்கப்பட்டு நீண்ட காலத்து நொதிக்கப்பட்டு சேகரம் செய்த ரசத்தை பரிசளிக்க எண்ணினான்.

திறப்பு விழாவிற்கு முந்தய நாள் அன்றே ரசத்தை ஆயிரம் கமண்டலங்களில் அடைத்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டு பட்டாடை போர்த்தி மூடிவைக்கப்பட்டிருந்தது. எழுப்பப்பட்ட கோட்டையின் உட்புறம் அமைக்கப்பட்ட உச்ச கோபுரம் நேர்கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு முன், அனைத்து கமண்டலங்களும் வைக்கப்பட்டிருந்தது. இச்செய்தி ஏகபாதனின் செவியை எட்டியது.



ரகசிய திட்டம் ஒன்றை தீட்டி, அதை தன் ஒற்றனிடம் ஆணையிட்டான். முந்தய நாள் நடு இரவில், ஒற்றன் ரகசியமாக, சமத்துவ கோட்டையின் திறமைகரமாக உள்நுழைந்தான். தன அரசன் ஏகபாதனிடம் இருந்து பெறப்பட்ட போலியான விஷம் கலந்த ரசம் நிரப்பப்பட்ட கமண்டலத்தை வைத்து அதற்கீடான மற்றோர் கமண்டலத்தை எடுத்துகொண்டான். கச்சிதமாக இக்காரியத்தை செய்து முடித்து வெளியேறினான்.  தப்பிசெல்லும் வழியில் வீரர்களிடம் மாட்டிகொண்டான். நேரடியாக மன்னன் இந்து சேகரனுக்கு உடனடி செய்தி அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார்.

இன்னும் விடிவதற்கு சில மணிநேரங்களே உள்ள நிலையில், விசாரணை நடந்தது. அவன் கையில் உள்ள கமண்டலத்தை கண்டு முதலில் திருடன் என்று எண்ணி, அனைத்து கமண்டலங்களையும் எண்ணினார். இருந்தாலும் எண்ணிக்கை குறையவில்லை. நீண்ட நேரம் சிந்தனைக்கு பிறகு, எதற்காக வந்தான் என்று கண்டு கொண்டார். ஆனால் ஒற்றனிடம் அவனை அனுப்பியது யார் என்று அந்த குறுகிய இடைவேலையில் கண்டு பிடிக்க முடியவில்லை. விஷம் கலந்த கமண்டலம் நாளை யாரேனும் அருந்தினால் அனர்த்தம் நிகழும். யாரும் எதையும் அருந்தாவிட்டாலும் தனக்கு அவமானம் நேரும். இதை எப்படி கையாள்வது என்ற குழப்பமான மனநிலையுடன் இருந்தார். காலம் கடந்து கொண்டிருந்தது. தனது நண்பனின் வருகையை ஆவலோடு வழிமேல் விழிவைத்து எதிர்நோக்கி இருந்தான். விடிந்தால் அனைத்து மன்னர்களும் வருகை தருவர். விழாவின் முடிவில் இந்த ரசத்தை அருந்த கொடுக்க வேண்டும். தன் நாட்டின் கவுரவத்தை காக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தார்.


விடியும் வேலை நெருங்கிகொண்டிருந்தது. அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டப்பட்டிருந்தது. இதற்கான தீர்வை நோக்கி அனைவரும் சிந்திக்க தொடங்கினர். ஒரு சிலர் இவைகளை வரும் மன்னர்களுக்கு தராமல் வேறு ஏதேனும் ரசத்தை அளித்து சரி செய்யலாம் என்று கூறினார். அதற்கு மன்னர், இது நம் நாட்டிற்கு நாம் தேடித்தரும் அவமானமாகிவிடும். வேறு ஏதேனும் காரணம் கூறுங்கள் என்று வினவினார். மற்றோர் அமைச்சர், பிடிபட்ட ஒற்றனுக்கே, ஒவ்வொரு கமண்டலத்திலிருந்தும் ஒரு சொட்டு ரசத்தை அளித்து, சோதனை செய்து கண்டறியலாம் என்று கூறினார். இதைதவிர வேறு உபாயம் இல்லை என்றார். அதற்கு மன்னர், இதை நானும் சிந்தித்தேன். அந்த ரசம் உயரிய வகையான மலாஞ்சி வகையை சேர்ந்தது. அதை ஒரு அளவுக்கு மேல் அருந்தினால், அவர்கள் சுய நினைவை இழப்பர். அதுவும் ஆயிரம் கமண்டலங்கள் என்றால் "சிறு துளி பெரு வெள்ளம்" போல் வெறும் நூறு கமண்டலத்திலேயே அவன் இறந்து விடுவான். நூறு துளிகள் பத்து கமண்டலத்திற்கு சமம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. எதனால் இறந்தான் என்று நம்மால் கூற இயலாது. இதற்கு வேறு வழி இருந்தால் கூறுங்கள் என்றார் மன்னர். இதற்கு வேறு வழியே இல்லை மன்னா என்று அனைத்து அமைச்சர்களும் புலம்பினர்.

அனைவரும் வருந்தி புலம்பிகொண்டிருந்த நேரத்தில் "நிச்சயம் தீர்வு உண்டு. எந்த ஒரு பிரச்சினைக்கும் நிச்சயம் தீர்வு உண்டு" என்று கூறியவாறே உள்நுழைந்தார் ராஜ உபதேசி ஆலமர்செல்வன்.

மன்னரின் முகத்தில் நிம்மதி பிறந்தது. அனைத்து அமைச்சர்களும் மகிழ்ந்தனர். சரியான சமயத்தில் வந்துள்ளாய் நண்பா என்று அவரை ஆலிங்கனம் செய்தார் மன்னர். நடந்தவற்றை கூறினார். இதற்கு தீர்வை நிச்சயம் காணலாம், என்று கூறி சமத்துவ கோட்டைக்கு செல்ல கூறினார் ஆலமர்செல்வன்.


இப்போது நீங்கள் சிந்தியுங்கள். உங்களிடம் ஏதேனும் உபாயம் உள்ளதா வாசகர்களே!!. இல்லையென்றால் தொடர்ந்து வாசியுங்கள்.

கோட்டைக்கு சென்று, கமண்டலங்களை காட்டி, ஒருவர் இதை பருகினால்தனே தீர்வை காண இயலாது. நிறைய பேர் இதை பருகினால் என்றார் ராஜ உபதேசி.
அதற்கு மன்னர், ஆயிரம் பேரையா அருந்த சொல்வது? என்று வினவினார்.
இல்லை மன்னா, குறைந்த எண்ணிகையில் கொண்டு தீர்வை காண வேண்டும் என்றார்.
இது எப்படி சாத்தியம். அந்த எண் என்ன? எப்படி செய்வது? என்றார் மன்னர்.

வாசகர்களே!! உங்களிடம் தற்போது ஏதேனும் தீர்வு உள்ளதா? தீர்வை தேடவேண்டுமென்றால், இங்கேயே படிப்பதை நிறுத்தி விட்டு சிந்தியுங்கள். இல்லையென்றால் தொடருங்கள்.

மன்னரிடம், ராஜ உபதேசி நாம் சிறைபிடித்துள்ள குற்றவாளிகளை இதற்கு பயன்படுத்துவோம் என்றார்.

"நம்மிடம் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளே உள்ளனரே" என்றார் மன்னர்.

"பத்து பேர் போதும் மன்னா. எளிதில் விஷம் உள்ள பாத்திரத்தை அறியலாம்" என்று கூறினார் ஆலமர்செல்வன்.

இன்னும் சில நாளிகைகளே உள்ள நிலையில், அவர் செய்வதை அணைத்து அமைச்சர்களும் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் உட்பட.

பத்து சிறை கைதிகள் வரவழிக்கப்பட்டு, வரிசையில் நிற்க வைக்கப்படிருந்தனர். ஒவ்வொரு கமண்டல பாத்திரத்திற்கும் எண்கள் ஒட்டப்பட்டு, ஒவ்வொரு கைதிக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு வரிசை படுத்தப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு கைதிக்கும் ஒரு காலி பாத்திரம் கையில் கொடுக்கப்பட்டது. முதல் ரச பாத்திரத்தில் ஒரு சொட்டை முதல் கைதியின் பாத்திரத்தில் விடப்பட்டது. இரண்டாவது ரச பத்திரத்தின் ஒரு சொட்டு இரண்டாவது கதிக்கும், மூன்றாவது ரச பாத்திர சொட்டுக்கள் முதல் மற்றும் இரண்டாவது கைதிக்கு அளிக்கப்பட்டது. சற்று அனைவரும் மிகுந்த குழப்பமடைந்தனர் உங்களை போலத்தான்.

இது ஒரு பைனரி அமைப்பின் வெளிப்பாடுதான். ஒவ்வொரு பாத்திர எண்ணிற்கும் அதற்கு சமமான பைனரி அமைப்பில் அந்த பத்து கைதிக்கும் சொட்டுகள் விடப்பட்டன. தற்போது ஆயிரம் பாத்திரம் என்பதால் பத்து கைதிகளே போதுமானது.

அனைத்தும் பாத்திரத்தின் ரசத்தின் சொட்டுக்களும் கலக்கப்பட்ட விதம் முடிந்த பிறகு, கைதிகள் பருக விடப்பட்டனர்.

இதன் பிறகு தீர்வு எளிதானதே.

இறக்கும் கைதிகளின் எண்கள் மற்றும் மொத்த எண்ணிக்கை கொண்டு, அந்த இறக்கும் பைனரி அமைப்பின் சமான எண்தான், அந்த விஷம் கொண்ட பாத்திரத்தின் எண். இதன் மூலம் பத்துக்கும் குறைவான கைதிகளை பணயம் வைத்து, விஷம் கொண்ட ரசத்தை கண்டறிந்து எடுத்து விட்டனர். உண்மையான ரச பாத்திரம் திரும்பவும் அதன் இடத்தையே அடைந்தது.

சமத்துவ கோட்டை திறப்புவிழா வெகு சிறப்பாக நடந்து அனைத்து மன்னர்களுக்கும் மலாஞ்சி ரசம் கொடுக்கப்பட்டது. ரசத்தின் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர் ஒருவரை தவிர. வேறு யார், ஏகபாதன் தான். ஒன்றும் புரியாமல் குழப்ப மனத்துடன், செயற்கை புன்னகையுடன்.


உங்களுக்கு இந்த தீர்வு விளங்கவில்லை என்றால், நீங்கள் கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும் வாசகர்களே!!!

நன்றி _/\_


2 Comments

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon