இயந்திரத்தின் பரிகாரம்சிறுகதை | Tamil Science Fiction Short Stories

robot-girl-tamil-story

 தகுந்தன தப்பிப்பிழைக்கும்என்ற டார்வினின் கூற்றுப்படி காலத்தின் வேகத்தில், தேவையானவை நிலை நிறுத்தப்பட்டு தேவையற்றவை புதைக்கப்படுகின்றன. அது எதுவானாலும் சரி. அறிவியலின் தாக்கத்தினால் இன்று நமக்கே தெரியாமல் மெது மெதுவாக மனிதனின் தனித்தன்மையான ஒன்றை இழக்கிறோம். இக்கதையின் ஓட்டத்தில் அது என்ன என்பதன் விடை கிடைக்கும்.

கடந்த நூற்றாண்டுகளில்தான் அறிவியலின் பயன்பாடு மனிதனுக்குப் பயன்படும் வகையில் உருப்பெற்றது. 

மனிதன் அவற்றைப் பயன்படுத்தி தனக்குத்தேவயானவற்றை நிகழ்த்திக்கொண்டான். மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்த நெருப்பிலிருந்து இதுவரை உருவாக்கியவை அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கான அடிக்கோல்களே. எதுவரை அவன் முன்னேறுவான்? அவன் முன்னேற்றத்தின் எல்லை என்ன? எனும் வினாக்களுக்கு விடைதான் என்ன?

அறிவியலைப் பொறுத்தவரை இரண்டு குழுவினரே. ஒன்று அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், மற்றொருவர் அதை பயன்படுத்துபவர். பயன்பாடு என்ற ஒன்று இருக்கும்வரையில், அறிவியல் கருவிகளின் தோற்றமும் அறிவியலின் தேடலும் இருந்துகொண்டேதான் இருக்கும். அப்பொழுதும் மனிதன் முன்னேறிக்கொண்டே இருக்கிறான் என்ற கூற்று நிலவும். ஆக, மனிதனின் தேவையின் எல்லையே அறிவியல் முன்னேற்றத்தின் எல்லையாக இருக்கும். ஒரு வேலை மனிதனின் அனைத்து தேவைகளும் தீர்ந்திவிடுமெனில் இனி எந்த தேவையும் இருக்கப்போவதில்லை எனும் நிலை வருமெனில், அறிவியலின் தேடலும் நின்று போகும். ஆனால் அவ்வாறு ஒரு நிலை உருவாவது சாத்தியமான ஒன்றா?

இயற்கையின் அமைப்பே அதன் சுழற்சி முறைதான். அவ்வாறு இருக்கையில் நிகழும் எதுவும் இனி நிகழப்போவதும் எதுவும் எப்போதும் நின்று விடுவதில்லை. இதுவரை நிகழ்ந்தவையே அதற்குச்சான்று. அதனால்தான் காலம் என்பதை ஒரு சக்கரத்துடன் ஒப்பிடுகின்றனர் போலும்.

சந்தீப் சித்தா ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். அவரிடம் கவுதம் குமார் மற்றும் ஹரீஷ் நந்தன் இரண்டு அறிவியல் பரிசோதகர்கள் மாணவர்களாக இணைந்து கற்பவர்கள். சந்தீப்பின் கருதுகோள்கள், கட்டுரைகள் மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள் ஏராளம். அவர் மனித மூளை மற்றும் அதன் மாற்றங்களைப் பல ஆண்டுகளாக நுண்ணோக்கி தன் பல கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்துவார். அவர் எழுதிய மனித மூளையின் மாயாஜாலம்எனும் புத்தகம் மிகப்பெரிய அளவில் விற்றுத் தீர்ந்த ஒன்று. இன்னும் பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் அவர். அவருடைய ஆராய்ச்சியின் முடிவு மனிதர்களின் மூளையின் சிந்திக்கும் திறன்தான் அதன் கட்டமைப்பு,  இது ஒவ்வொரு இருபதாண்டிற்கும் சில மாற்றங்களை அடைகிறது என்றும் சிந்திக்கும் திறன் கடந்த நூற்றாண்டில் அதிகப்படியான நிலையை அடைந்து மீண்டும் சரியத்தொடங்குகிறது என்றும் கண்டறிந்தார். இந்த சரிவு கடந்த ஒரு சில வருடங்களின் அவர் ஆராய்ச்சியின் தரவுகள் அடிப்படையில் தெரிந்தது. இந்த முடிவுகள் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைப் பொருத்து மாறுபடுகிறது என்றும் கண்டறிந்தார். இந்த சரிவிற்கு அவர் கூறும் முக்கியமான காரணம் அறிவியல் கருவிகளின் ஆதிக்கம். இது கொஞ்சம் மனதை மிகவும் பதைபதைக்க வைக்கிறது அல்லவா.
இதனால் அவரின் கூற்றுப்படி, இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதர்களில் சில பகுதியினர் மூளை வேறுவிதப் பரிணாமத்திற்குச் செல்லலாம். மற்ற சிலர் மற்றோர் பரிணாமத்திற்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது சிந்திக்கும் திறன் அடிப்படையில் மனிதர்களில் இனத்தில் பிரிவினை ஒன்று நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்.

இவ்வாறு பிரிந்தால் சிந்தனையை இழக்கும் மக்கள் கூட்டம் என்னவாகும் அவர்களால் என்ன நிகழும் அல்லது அவர்களுக்கு என்ன நிகழும் என்று சிந்தித்தால் நிறைய நிறைய என்ன ஓட்டங்கள் மதியைப் பிதற்றுகிறது. இவ்வாறெல்லாம் சந்தீப்பின் சிந்தனை தூண்டலின் முடிவே அவரின் செயற்கை முறை சிந்தனை தூண்டல்ஆராய்ச்சி ஆகும். இது சற்று வித்தியாசமாகவும் மற்றும் பிரமிப்பாகவும் இருக்கும். நிகழ்காலத்தில் சற்று ஆழமாகச் சிந்தித்தால் உங்களுக்கே ஒன்று விளங்கும். அதாவது, சிறு வயதில் நாம் மிதிவண்டி, நீச்சல் பழகியிருப்போம். ஆனால் ஒரு வேலை அவற்றைச் சிறு வயதில் கற்காதவர்கள், சற்று வயதான காலத்தில் கற்க முற்பட்டால் அவர்கள் கற்றல் உத்தமமாக இருக்காது அல்லது அவர்கள் அதனை கற்கும் பக்குவத்தை இழந்திருப்பர். இதுதான் மூளையின் இயலாமை அல்லது திறன் குறைந்த நிலை. இந்த உதாரணம் ஒரு சிறு துளியின் துளியே. எதிர்காலத்தில் இக்குறைபாடு சிறுவயதிலேயே ஒரு சிலபேருக்கு வந்துவிட்டால், அதுதான் ஒரு மிகப்பெரிய நோய். அதுமட்டுமல்லாது இக்குறைபாடு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவர்கள் நிச்சயம் மனிதன் என்ற நிலையிலிருந்து வேறோர் நிலைக்குத்தள்ளப்படுவர். இது எவ்வாறு சாத்தியம் ? என்று தோன்றலாம். ஆனால் இதற்கு தகுந்த காரணம் ஒன்றை சந்தீப் தன் ஆராய்ச்சி புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சந்தீப்பின் மற்ற பல புத்தகங்களைப்படித்த அவரிடம் கற்கும் மாணவர்களாகிய கவுதம் மற்றும் ஹரீஷ் மிகுந்த ஆர்வம் கொண்டு இவ்வாராய்ச்சிக்கட்டுரையை படித்துவந்தனர். நிறைய கேள்விகளை சந்தீப்பிடம் வினவுவர்.
ஒரு நாள் காலை வேலை, ஆராய்ச்சிக்கூடத்தில் கணினி முன் அமர்ந்துகொண்டு சந்தீப் ஒரு தலைக்கவசம் போன்றதொரு அமைப்பை உருவாக்கிகொண்டிருந்தார். அது சற்று முன்தலையிலிருந்து தொடங்கி பின் கழுத்து வரை மூடியவாறு மற்றும் பக்கவாட்டில் காதுகளுடன் சேர்த்து மூடியவாறு அமையப்பெற்று, அங்கங்கு சிறு சிறு துளைகளுடன், மற்றும் ஒரு சில மின்கம்பிகள் இணைக்கப்பட்டு, அதன் மேலே ஒரு சிறிய திரையுடன் காணப்பட்டது.
கவுதம் ஹலோ சந்தீப் சார். குட் மார்னிங். இது என்ன டிசைன் சார். நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று பணிவுடன் வினவினான்.
சந்தீப் வெரி குட் மார்னிங் கவுதம். ஹரீஷ் எங்கே?. அவன் வந்துட்டா நானே இரண்டு பேருக்கும் சேந்தே சொல்லிவிடுவேன்.
ஹரீஷ்  “ஹலோ சார். நான் வந்துட்டேன். என்ன சொல்லிதர போறீங்க சார். எனி இண்டரஸ்டிங் மேட்டர்?”
சந்தீப் ஆமா ஹரீஷ். என்னோட ரிசர்ச் ஆர்டிக்கில படிச்சிருப்பீங்க இல்லையா?, அதோட ப்ரோடோடைப் பண்றேன். அதோட சாதக பாதகங்கள ஆராய்ச்சி பண்றேன். ஏன்னா, அதோட சில கட்டுப்பாடுகளையும் வரையறை செய்யனும்.
கவுதம் வாவ், இவ்வளவு தூரம் வந்திருச்சா சார். கட்டுரைய படிக்கும்போது எனக்கு நிறைய பிரமிப்பா இருந்தது. இப்ப உங்களோட இந்த மாதிரிய பார்க்கும்போது எப்படி இது வரப்போகிறதென்று பாக்க நிறைய ஆவலா இருக்கு சார்
ஹரீஷ் ஆமா சந்தீப் சார். எங்களுக்கு இத பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்
சந்தீப் சரி சொல்றேன். என்னோட செயற்கை முறை சிந்தனை தூண்டல் கட்டுரைப் படிச்சீங்க இல்லையா. அதன்படி பாத்தா, எதிர்காலத்தில் மனுஷனோட சிந்தனைத் திறன் குறையலாமென்று ஒரு தியரி சொல்லிருப்பேன். அதனால அத சரி செய்யத்தான் இந்த செயற்கை முறை தூண்டல். இது எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி. ஆனா நிறைய ரொம்ப மைக்ரோ அளவிலான எலெக்ட்ரிக் சிக்னல மனித மூலையில ஒரு சில பகுதிக்கு தொடர்ந்து செலுத்தி, அப்படியே கம்ப்யூட்டர்ல நம்ம ப்ரோக்ராம் செஞ்ச கட்டளைய அனுப்பி, மூளைய நேரடியா நமக்குத் தேவையான வேலைய செய்ற மாதிரி பழக்கிவிடலாம். அப்பறம் மூளை அதை செயல்படுத்த ஆரம்பிக்கும். ஆனால் இதை செய்யனும்னா இன்னும் நிறைய ரிசெர்ச் பண்ணவேண்டியிருக்கு.
ஹரிஷ் சார் இந்த குறைபாடு எதனால உண்டாகும்னு சொலுங்களேன். முக்கியமான காரணம் என்ன?”
சந்தீப் இப்பல்லாம் மனுஷனோட வேலைய சுலபமாக்க நிறைய கருவிகள் வந்திருச்சி. அதனால மனுஷன் எந்த வேலையையும் சொந்தமா பண்றதுக்கு பதிலா கருவிகள பயன்படுத்துறான். அதனால அவனுக்கு எல்லா வேளையும் சீக்கிரமா முடியுது. இன்னும் சில கருவிகள் மனிஷன் பண்ண முடியாத வேலையும் செய்யுது. அதனால அவன் அது மேல அவனுக்கு ரொம்ப மோகம் வந்து அதனோடையே வாழ ஆரம்பிக்கிறான். தான் பக்கதுல இருக்கிறவங்ககிட்ட கூட சரியா பழகுறதே கிடையாது. அதனால அவனுக்கு ஒரு இயந்திரத்துகிட்ட பழகுற சுபாவம் வந்து மனுஷங்ககூட பழகுற சுபாவம் அழிய ஆரம்பிக்குது. அதோடு அவன் செய்யற வேலையையும் எப்படி பண்றதுன்னு மறக்குறான். இப்படி அடிப்படை வேலைய செய்யுற அறிவ இழந்துட்டா, அவன் எப்படி அவனோட சந்ததிக்கி நல்வழிகாட்டுவான். எப்படி பண்புகளும், அறிவுகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். இந்த குறை நாளைக்கு அவனோட சந்ததிக்கி சீக்கிரமாவே வந்துடும். அவுங்க அதவிட சீக்கிரமா அறிவ இழப்பாங்க. இப்படி அறிவியல் கருவிகளுக்கு அடிமையாகி தன்னோட சுயத்தையே இழந்திடுவாங்க. நாம கருகிவிகளை கட்டுப்படுத்துறது போய், கருவிகள் நம்மள கட்டுப்படுத்தும். ஆனால் நான் அறிவியல் கருவிகள குற்றம் சொல்லல, அவங்க பயன்படுத்தும் முறையைத்தான் குற்றம் சொல்றேன். இதனால அவங்களோட மூளை வேறொரு மாற்றத்த சந்திச்சா, பிறகு அங்கிருந்து மீள்றதுக்கு ரொம்ப காலம் ஆகலாம். அதுவும் அவங்க அதுல இருந்து மீளனும்னு யோசிச்சா மட்டும்தான் அது சாத்தியம். அதுக்குதான் நான் இப்ப இருக்குற மூளையோட எல்லா செயல்பாடுகளையும் தரவாக மாத்திகிட்டு இருக்கிறேன். இதை வைத்து ஒரு குறைபாடுள்ள மூளைய சரிசெய்யணும்.
கவுதம் உங்க ஆராய்ச்சிய எப்படி நீங்க பண்றீங்க. அதாவது எந்த குறைபாடுள்ள மூளைய நீங்க உங்க ஆராய்ச்சிக்கி எடுத்துகிறீங்க சார்”.
சந்தீப் அது ஒரு குரங்கு மூளை ப்பாஎன்றார் சிரித்துக்கொண்டே.
ஹரிஷ் என்னது குரங்கா ?!!” என்றான் ஆச்சர்யத்துடன்.
சந்தீப் ஆமா ஹரிஷ். நம்ம நேரடியா மனுஷனோட மூளைய எடுத்துக்க முடியாது. ஏன்னா, இப்போதைக்கு அப்படிபட்ட குறையுள்ள மூளை இல்ல. அப்பறம் குரங்கு மூளை திறன் அளவு மனுஷனோட மூளைக்கு கொஞ்சம் பக்கத்துல இருக்கு. அதுமட்டும் இல்ல. நான் சொல்லற இந்த மூளைக்குறைபாடு வந்த அப்புறம், அப்ப இருக்குற மனுஷனோட மூளை கிட்டத்தட்ட ஒரு குரங்கு மூளைக்கு சமமா மாறிடும். அப்படின்னா இந்த ஆராய்ச்சிக்கு குரங்கு மூளைதான எடுத்துக்கணும். என்ன நான் சொல்றது”. என்றார்.
கவுதம் நீங்க சொல்ற தியரி, எனக்கு இந்த பைவ் மங்கி அண்ட் ஒன் பனானா ஸ்டோரிய ஞாபகப்படுத்துது”
சந்தீப் ஆமா. சரிதான். எதிர்காலத்துல நெறய பேருக்கு அந்த ஸ்டோரில இருக்குற மாதிரி நடக்கலாம். இப்பவே அப்பிடி ஒரு நிலைமைதான் நடக்குது.என்றார் சிந்தித்து கொண்டே.
கவுதம் சந்தீப் சார், உங்கள் ஆராய்ச்சிக்குக் குரங்கு மூளை வேணும்னா சொல்லுங்க, நம்மகிட்ட பக்கத்திலேயே இருக்குஎன்று ஹரிஷை பார்த்தான்.
சந்தீப் மற்றும் கவுதம் சிரித்தனர். ஹரீஷ் சற்று குரங்குபோல முகத்தை வைத்து பாவனை செய்து கவுதமை செல்லமாகச் சீண்டினான். பிறகு அவனும் நகைத்தான்.
கவுதம் சார் நீங்க எழுதிக்கொண்டு இருக்கிற குரங்கிலிருந்து குரங்கு வரை புத்தகம் எப்ப முடியும்
சந்தீப் என்னோட தியரி எல்லாத்தையும் எழுதிட்டேன். ஆனா அதுக்கான முடிவை மட்டும் இன்னும் எழுதனும். முடிவு நான் செய்யுற இந்த ஆராய்ச்சியின் முடிவ பொறுத்துத்தான் இருக்கு. ம்ம் பாக்கலாம் என்ன நடக்கும்னு.
ஹரீஷ் சார். எதிர்காலத்துல உங்களோட கண்டுபிடிப்பு எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க. அதாவது யார் யார்லாம் இத பயன்படுத்துவாங்க. எதுக்கு பயன்படுத்துவாங்க. ஏன்னா அதோட சாதக பாதகம் பற்றி சிந்திச்சிட்டு, அதற்கேற்ற கட்டுப்பாடுகளும் சொல்லனும்னு நீங்க சொன்னீங்க இல்லையா
சந்தீப் நீ சொல்கிறது மிகச்சரி ஹரீஷ். இத எளிமையாவே சொல்றேன். எதிர்காலத்தில் இருக்குற ஒரு பையனுக்கு கூட்டல் கழித்தல் கணக்குபண்றதுக்கு வரல அப்டின்னு வச்சுப்போம். இந்த செயற்கை சிந்தனை தூண்டல் மூலமா நாம அவன் மூளைக்கு கால்குலேட்டர் ப்ரோகிராம இன்ஸ்டால் செஞ்சிட்டா போதும். அப்புறம் அவன் சீக்கிரமா எந்தவொரு கணக்கையும் போட்டுருவான்.
கவுதம் எனக்கு ஒரு சந்தேகம். ப்ரோக்ராம் பண்றதுனா இப்ப இருக்குற கம்ப்யுட்டர் ப்ரோக்ராம் மாதிரியா?”
சந்தீப் இப்ப இருக்குற கம்ப்யூட்டர் லாங்வேஜ் இதற்குப் பயன்படாது. இனிமேதான் மனித மூளை செயல்பாட்டுக்கு ஏத்தமாதிரி கட்டளைகள் தயார் பண்ணி, அத சோதனை செய்யனும். இப்போதிக்கு என்கிட்டே ஒரே ஒரு அம்சம் மட்டுமே இருக்கு. மனித மூளையோட மொத்த செயல்பாட்டோட முழுமையான தரவு தொகுப்பு.
ஹரீஷ் சார், இப்படி கஷ்டப்பட்டு ஆராய்ச்சி பண்ணி ஒரு கருவிய கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஏதாவது முன்னேற்பாடு பத்தி யோசிக்கலாமே? வருமுன் காப்பதே சிறந்தது இல்லையா?”
சந்தீப் நீ சொல்கிறது சரிதான். மனிதன் ஒரு விசித்திர மிருகம். என்னதான் நம்ம அனுபவ ரீதியா ஒரு வழி கண்டுபிடித்தாலும், அவன் மற்ற வழிகளை சோதன பண்ணி பார்க்கவே விரும்புவான்.
ஹரீஷ் நீங்க சொல்கிறது புரியலையே!!
சந்தீப் அதாவது முன்னேற்பாடுன்னு ஒன்னு இருந்தா, அது விழிப்புணர்வு ஏற்படுத்துறது மட்டுமே. அதுக்கு சட்டம் எல்லாம் போட முடியாது. ஏன்னா இது ஜனநாயக நாடு. இந்த கருவிகள நீ இப்ப பயன்படுத்தக் கூடாது, இவ்வளவு நேரம் தான் பயன்படுத்தணும். இதற்காகத்தான் பயன்படுத்தணும் அப்டின்னு சொல்ல முடியாது. அப்படி மீறி பயன்படுத்தினா உங்களுக்கு இந்த குறைபாடு வரலாம்னு வேணும்னா சொல்லலாம். ஆனால் அப்படி சொல்றதனால எல்லாரும் அத பின்பற்ற மாட்டாங்க. நம்ம எத செய்யக்கூடாதுன்னு சொல்றமோ, அத செய்யனும்னு மூளை தூண்டும். அதுதான் மூளையோட ஆர்வம். அதிர்ஷ்டவசமா அந்த மூளையோட ஆர்வமே என்னோட இந்த கண்டுபிடிப்புக்கு ஆணிவேர். முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்.
கவுதம் நீங்க சொல்றது ரொம்ப சரிதான் சந்தீப் சார். நானும் அப்படிதான் சிலசமையத்துல, சில செயல்கள செஞ்சி பாத்து தெரிஞ்சிக்க விரும்புவேன்.
ஹரீஷ் சிரித்துக்கொண்டே “கவுதமு, உனக்குப் பட்டாதான் புத்தி வரும்டா”
ஹரீஷ் சந்தீப்பிடம் மூளையோட ஆர்வம். அத எப்படி உங்கள் கண்டுபிடிப்புக்கு நீங்க எடுத்துகிறீங்க சார்.
சந்தீப் செயற்கை முறை தூண்டல்ல, மூளையோட ஆர்வம் தூண்டும் பகுதிய முடுக்கினால், அது நம்ம கொடுத்த எந்தவொரு கட்டளையும் உடனே பண்றதுக்கு உந்தும். அதனால நம்ம கொடுக்கிற செயற்கை கட்டளைய மூளை ஆர்வத்த தூண்டி அப்படியே கொடுக்கவேண்டும். அதுதான் ஒரு செயற்கையான சிந்தனை தூண்டல். இப்படி ஆர்வமும் கட்டளையும் அதாவது வழிகாட்டலும் சேர்ந்துதான் சிந்தனையா மாறுதுன்னு சொல்லலாம்.
கவுதம் அதாவது ஆர்வமுள்ள மாணவன் எப்படி நல்ல வழிகாட்டலில் மிகச்சிறந்தவனாக மாறுவான் அப்டிங்கிறத ஒப்பிடலாமா சார்?”
சந்தீப் மிகச்சிறந்த ஒப்பீடு. ம்ம்ம், நீ ஒரு நல்ல சிந்தனையாளனா வருவ கவுதம்.என்றார் முகத்தில் புன்னகையுடன்.
கவுதமும் ஹரிஷும் இணைந்து அதுக்குதான் நாங்க உங்கள் கிட்ட கத்துக்க வந்திருகோம் சார்என்று அன்புடன் கூறினர்.
புன்னகையுடன் சிந்தித்துக்கொண்டே சந்தீப் சரி சரி. நல்லது. போய் நான் கொடுத்த வேலைய முடிங்கஎன்று கூறிவிட்டுத் தான் வைத்திருக்கும் ஒரு கோப்பில் எழுத ஆரம்பித்தார்.

மனிதர்களின் சிந்தையில் உருப்பெற்று உயிர்பெற்று
மனிதர்களுடன் வாழ்ந்து மனிதனாக மாறிய இயந்திரம்,
தன்னால் ஒரு மனிதன் இயந்திரமாகிறான் எனும் வருத்தத்தில்
அவனுக்கு செய்யும் பரிகாரமே செயற்கை முறை சிந்தனை தூண்டல்.
இதுவும் இயற்கையின் சுழற்சியில் (சூழ்ச்சியில்) ஒன்றாகலாம்.
-    சந்தீப் சித்தா

மேலும் படிக்க Tamil Stories

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon