காலை வேலையில் வண்ண வானில், சில்லென்ற மேகத்தின் ஊடே, வாயுதேவன் என்னை வருட, பறக்கும் பறவைகளை ரசித்துகொண்டே, பூமித்தாயை தொலைவில் இருந்து கண்டுகொண்டே இப்படி அமைதியான சப்தத்தில் பறப்பது மிகவும் இதமான ஒன்று. இன்று நாம் காணாததை காண வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, எவ்வளவு தூரம் போனாலும் சரி. ஏதாவது ஒன்றை நான் காண வேண்டும். 

flame-island-hw2tamil story


செல்வேன், செல்வேன், நீண்ட தூரம் செல்வேன்.

அடடா என்ன இது மகா சமுத்திரமா!! மிகவும் பரந்து விரிந்து என் கண்ணுக்கே அப்பாற்பட்டு உள்ளதே. பூமித்தாயின் மேல் போர்த்தப்பட்ட கம்பளம் போல் உள்ளது. சாரல் கலந்த காற்றின் ஊடே, தூய காற்றை சுவாசித்துக்கொண்டே பறக்கிறேன். என்ன அருமையான உணர்வு. மேலும் இந்த சமுத்திரத்தின் காட்சியை என்னைப்போல் யாராலும் காண இயலாது என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 

அடடா, என்ன இது மீன்கள் சமுத்திரத்தின் மேல வந்து துள்ளிக்கொண்டே மீண்டும் மூழ்கியதே, அற்புதம். தூரத்தில் ஏதோ ஒரு மலை போன்று தென்படுகிறதே. அதன் அருகில் சென்று பார்ப்போம். 

மிகவும் அற்புதமான அமைப்பாக தென்படுகிறதே. அருகில் செல்ல செல்ல, சமுத்திரம் தெளிந்த நீரோடை போல இருக்கிறதே. கடல் உயிரினங்கள் தெள்ள தெளிவாக இங்கிருந்தே சமுத்திரத்தின் அடிப்பாகம் வரை காண முடிகிறது. இங்கு யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே. இன்னும் தூரம் செல்ல வேண்டும். அருகில் வந்துகொண்டே இருக்கிறேன். மலையின் அளவு பெரிதாகிறது. அழகிய மலையே உன்னைக்காண வந்து கொண்டே இருக்கிறேன். 

மிகவும் பிரமிப்பு, இவ்வளவு படகுகள், சமுத்திர ஊர்திகளா? கரையோரத்தில் தேன் கூட்டின் அடுக்குகள் போல் அழகான அடுக்களாக அடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கான அமைப்பில் அணைத்து படகுகள் ஊர்திகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை நான் இவ்வாறு ஒன்றை கண்டதில்லையே. அற்புதம். இதை இவ்வாறு அமைத்தது யார்?

சற்று தாழ்வாக பறப்போம். அடைந்துவிட்டேன் கரையை. கரையை தொடர்ந்து அழகிய கானகம். மிகவும் உயரமான மரங்கள். பூக்கள் காய்கள் கனிகள் கொத்துகொத்தாக யாரேனும் பறிக்க மாட்டர்களா என்று ஏங்கிக்கொண்டு இருப்பது போல் உள்ளதே. மரங்களின் ஊடே பறவைகளின் சம்பதம் என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது. சப்தஸ்வரங்களின் இசையை மிஞ்சும் ஒலி என் காதை அடைகிறது. எதோ அருவியின் சம்பதம் கலந்துள்ளதே.

சற்று தூரம் பறப்போம். ஆகா, மிக அற்புதம். வியந்தேன். நெகிழ்ந்தேன். எங்கும் காண கிடைக்காத காட்சி. பெரும் அருவி. அந்த சமுத்திரமே பொங்கும் அளவு நீர் இந்த மலையின் உச்சியிலிருந்து விழுந்துகொண்டுள்ளுது. ஒரே இடத்தில் பல அருவிகளா? இதை படைத்த இறைவனுக்கு நன்றி. இதை அனுபவிப்பது யார். இந்த நிலப்பரப்பின் மக்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க கூடும். 

இன்னும் சற்று தூரம் செல்வோம். அடடா, குதிரைகள், பசுக்கள், காளைகள் துள்ளி குதிக்கின்றன. பெரு மகிழ்ச்சி. பெரும் போருக்கு நிறுத்தப்பட குதிரை படையின் எண்ணிக்கையே மிஞ்சும் இங்குள்ள குதிரைகளின் எண்ணிக்கை என தோன்றுகிறது. அணைத்து விலங்குகளும் பிரமாண்டமான இந்த சமதள பரப்பில் சுதந்திரமாக இவ்வாறு சுற்றி திரிகிறதே. யார் இவற்றை கவனிக்கிறார்கள். இல்லை இல்லை, இதை கவனித்து கட்டுப்படுத்துவார் இல்லை என்று நினைக்கிறன். எனவேதான் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.

இப்படி ஒரு வாழ்கையை எவரும் விரும்புவர். 

அங்கென்ன, மக்கள் கூட்டம். வீடுகள். மனம் மயங்கும் அளவுக்கு மகத்தான அழகிய மாளிகைகள். ஓவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மக்கள் கூட்டம் கூட்டமாக திருவிழா போன்று கொண்டாடிகொண்டிருகின்றனர் போலும். இல்லை இல்லை, வேலை செய்து கொண்டிருகின்றனர். அவர்களின் தொழிலையே ஒரு கொண்டாட்டம் போல் செய்கின்றனர். என்ன ஒரு அதிசயம்!! யார் இவர்களை ஆள்கிறான்? யார் அவன்?

இப்படி ஒரு தேசத்தை சாதாரணமான ஒரு மனிதனால் கட்டமைக்க முடியாது. அவன் மிகவும் திறமை வாய்ந்தவனாக இருக்க வேண்டும்.

மீண்டும் தூரம் சென்று பார்ப்போம். மிகப்பெரிய மைதானம், குருகுலங்கள், இத்துனை பேருக்கும் இவ்விடத்தில் பயிற்சி நடக்கிறது. அமைதியான இடமாக விளங்குகிறதே.

ஒவ்வொன்றும் இந்த நிலப்பரப்பில் என்னை ஈர்க்கின்றது. இதற்கெல்லாம் காரண கர்த்தா யார்? 

கண்டுபிடிக்காமல் செல்வதாக இல்லை. செல்வேன் செல்வேன்.

பெரும் ஏரி. அதன் ஓரத்தில் இவ்வளவு பெரிய மாளிகையா? ஓ இதுதான் அரண்மனை போலும். அரண்மனையே இந்த நிலப்பரப்பில் அரை பங்கு இருக்கும் போல.

மிகப்பெரிய மதில் சுவர். வீரம் பொருந்திய காவலாளிகள். வினோத வினோதமான போர்கருவிகள், ஊர்திகள். இப்படி ஒரு வினோதமான கருவிகளை இப்போதுதான் காண்கிறேன். அறிய கண்டுபிடிப்பாக தோன்றுகிறது. 

என்ன இது. கோயில் போல உள்ளது. அரண்மனையின் மத்தியில் உச்ச கோபுரம் கொண்ட கோயில் அது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதே. இத்தனை பெரிய சிவா லிங்கமா? எத்துனை பெரிய பக்தனாக இருப்பானோ. என்ன ஒரு தூய மனம். பூஜை, மந்திரம், இசை என அணைத்து ஒலிகளும் காதில் தேன் வந்து பாய்வது போல் சிலிர்க்க வைக்கிறதே.

இசைக்கப்படும் இசை எனை சாய்த்து விடும் போல் உள்ளது. யார் இதை மீட்டுகிறார்கள். தரையை அடைவோம்.

யாருக்கும் தெரியாமல் கோயிலின் உள் நுழைகிறேன். ஒளிந்து கொண்டே சிவ தரிசனம் காண்கிறேன். இசை மீட்டல் நிகழ்ந்துகொண்டே உள்ளது. அதை அறிய மிகவும் ஆவலாக உள்ளது. மண்டபத்தின் உள்ளே பதுங்கி  கடந்து சென்று கொண்டிருக்கிறேன். இறுதியில் கண்டேன் அவனை. 

சூரியன் சுடும் பார்வை, வீரம் பொருந்திய புஜங்கள். தேவர்களும் பொறாமை கொள்ளும் தங்க கவசங்கள், வைரகற்கள் பொருந்திய கிரீடம், அணிகலங்கள். தெளிந்த முகம், அருமையான இசையை மீட்டும் கைகள், தாளத்திகேற்ற தலை அசைவு, இவன்தான் இந்த நிலப்பரப்பின் அரசனாக இருக்ககூடும். பார்க்கும்போதே என்ன ஒரு கம்பீரமான தோற்றம், புன்னகையுடன் மீட்டுகிறான் இசையை, அந்த சிவலிங்கமே மெய் சிலிர்க்கும் அளவுக்கு மீட்டுகிறான். யார் இவன்.

இவன்தான் இந்த சுடர்வடிவ தீவின் அரசனோ. சுடரின் அடியில் அரண்மனை, அதன் மத்தயில் கோயில். இந்த சுடருக்கே ஆதாரம் போல் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறான் போல. 

இவன் பெயர் தான் என்ன ?



Post a Comment

Previous Post Next Post
Support @Amazon